Tamil Swiss News

சுவிற்சர்லாந்தில் கொரோனாவைத் தொடர்ந்து தொடர்ச்சியான தொழில் முடக்கங்கள்.

சுவிற்சர்லாந்தில் கொரோனாவைத் தொடர்ந்து தொடர்ச்சியான தொழில் முடக்கங்கள்.

சுவிற்சர்லாந்தில் கொரோனா பெருந் தொற்றுக்கள் தற்போது கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளன. மத்திய கூட்டாட்சி அரசு இம்மாத இறுதியில் மேலும் சில தளர்வுகளை அறிவிக்க ஆலோசித்துள்ளது.


இந்நிலையில் அதிர்ச்சி தரும் செய்தியாக கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமான தொடர்ச்சியான தொழில் முடக்கங்களினால், அடுத்து வரும் மாதங்களில் பெரும் பணியிழப்புக்கள் ஏற்படக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


ஏற்கனவே சில நிறுவனங்கள் தங்களது பணியாளர்களின் குறைப்பினை ஆரம்பித்திருக்கும் நிலையில்,

ஹோட்டல் மற்றும் உணவகங்கள், என்பவற்றில் கடந்த ஆண்டு சுமார் 40 ஆயிரம் பேர் வரை பணியிழந்தனர் என்றும், இந்த ஆண்டு மேலும் 10,000 பேர் வேலையிழக்க வேண்டிவரலாம் எனவும், காஸ்ட்ரோ சூயிஸ் தலைவர் காசிமிர் பிளாட்ஸர் செய்திச் சேவையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.


வணிக சுற்றுலா அல்லது நிகழ்வுகள் மற்றும் கண்காட்சிகளைச் சார்ந்துள்ள ஹோட்டல் மற்றும் உணவகத் துறையில் உள்ள நிறுவனங்களே நெருக்கடியில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன எனவும், சில மலை இடங்களும், ஏரி மற்றும் கிராமப்புறங்களில் இது ஒரளவு காப்பாற்றப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, ஜூரா, ஆர்காவ், வலாயிஸ், ஆகிய மூன்று மாநிலங்களில், இந்தத் துறைகளில் பணியாற்றும் பல வெளிநாட்டினர் பணியிழப்பு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


ஜூரா மாநிலத்தில் 10.2 சதவிகித வேலையின்மையும், ஆர்காவ் மாநிலத்தில், 7.6 சதவீதமும், அதற்கடுத்து வலாய்ஸ் மாநிலத்தில் 7.3 சதவீதமானோரும் வேலையிழப்பில் உள்ளதாக அறியப்படுகிறது.


பிரபலமான சுற்றுலாத் தலமான வலாயிஸைப் பொறுத்தவரையில், ஹோட்டல் மற்றும் உணவகத் தொழில்களின் மந்தநிலை வேலையின்மை பெருமளவில் காரணமாகிறது. இந்த இரண்டு துறைகளுமே பெரும்பாலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பயன்படுத்தும் துறைகளாகும்.