Tamil Swiss News

வருவாய் இழந்து சுவிஸ் மருத்துவமனைகள்: பணிபுரிவோருக்கு ஊதியம் வழங்க முடியாத சூழல்

வருவாய் இழந்து சுவிஸ் மருத்துவமனைகள்: பணிபுரிவோருக்கு ஊதியம் வழங்க முடியாத சூழல்

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது முதல், வருவாய் இழந்து சுவிஸ் மருத்துவமனைகள் தவிப்பதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது முதல், மருத்துவமனைகளில் வழக்கமான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைகளுக்கு வரும் வருவாய் குறைந்தது.

மேலும், பனிச்சறுக்கு ரிசார்ட்டுகள் மூடப்பட்டதால், பனிச்சறுக்கு விளையாட்டுகளின்போது ஏற்படும் விபத்துக்கள் காரணமாக யாரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவில்லை.

அதே நேரத்தில், கொரோனா நோயாளிகளுக்காக செலவிடுதல் அதிகரித்துள்ளது. தீவிர சிகிச்சைப்பிரிவுகளில், வெண்டிலேட்டர்களுடன் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய சூழலும், புதிய சுவர்களை எழுப்பி புதிய அறைகளை உருவாக்கவேண்டிய சூழலும் ஏற்பட்டது.

பாதுகாப்பு உடைகள், மாஸ்குகள் போன்றவற்றிற்கான செலவுகளும் அதிகரித்தது. ஆக, வருவாய் குறைந்து செலவு அதிகரித்ததால், மருத்துவமனைகளில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஆகவே, மருத்துவமனைகளில் பணிபுரிவோருக்கு ஊதியம் வழங்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளதாக வலாயிஸ் மருத்துவமனை இயக்குநர் Hugo Burgener கூறியுள்ளதாக SonntagsZeitung என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மாகாணங்கள் தங்கள் மருத்துவமனைகளுக்கு கடனுதவி வாயிலாக உதவியளிக்க முன்வந்துள்ளதாகவும், அரசும் கொரோனா வைரஸ் சேவைகளுக்கு நிதியுதவி வழங்குவது குறித்து விவாதித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.