மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாது: சுவிஸ் கல்வி அமைச்சகம் உறுதி!

கொரோனா அச்சுறுத்தலின் மத்தியிலும், கல்வியாண்டு நீட்டிக்கப்படாது என்றும், பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையிலும் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு டிப்ளமோக்கள் வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் நாடு முழுவதும் பள்ளிகள் மூன்றாவது வராமாக மூடப்பட்டுள்ள நிலையில், ஒன்லைன் கற்பித்தல் உட்பட பல நடைமுறைகள் பயன்பாட்டில் உள்ளன.
பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையிலும், 2019/ 2020 கல்வியாண்டு நீட்டிக்கப்படாது என்று கூறியுள்ள கல்வி அமைச்சர்கள், அதே நேரத்தில், விடுமுறை நாட்களில் கல்வி பயிற்றுவிக்கப்படாது என்றும் உறுதியளித்துள்ளனர்.
உயர் கல்வியில் தேர்ச்சி பெற்றோர் மேற்கொண்டு கல்வி கற்கவோ பணி செய்யவோ அனுமதிக்கப்படுவர் என்றும், தொழிற்கல்வி முதலானவை பயில்வோருக்கு டிப்ளமோ வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாத இறுதியில், மாணவர்கள் அடுத்த வகுப்புகளுக்கு செல்வது குறித்த மேலதிக அறிவிப்புகள் வெளியாகும்.
பள்ளி மூடல்களின் எதிர்காலம் குறித்த அரசின் அறிவிப்பு ஒன்று ஈஸ்டர் பண்டிகைக்கு முன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.