காரில் துப்பாக்கியுடன் நடமாடிய சுவிஸ் இளைஞர் : ஜேர்மனி பொலிசார் கைது

ஜேர்மனியின் கான்ஸ்டன்ஸ் நகரில் காரில் துப்பாக்கியுடன் நடமாடிய சுவிஸ் இளைஞரை அங்குள்ள பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கான்ஸ்டன்ஸ் நகருக்கு தமது நண்பர்கள் குழு ஒன்றுடன் 27 வயது சுவிஸ் இளைஞர் சுற்றுலா சென்றுள்ளார்.
இந்த நிலையில் அவர்களது வாகனத்தை சோதனையிட்ட ஜேர்மனி பொலிசார் அதில் இருந்து சுவிஸ் ராணுவத்துக்கு சொந்தமான துப்பாக்கி ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.
விசாரணையில் குறித்த இளைஞர்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் எனவும், சமீபத்தில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி முடித்து, அந்த துப்பாக்கியை உரிய இடத்தில் ஒப்படைக்க தவறியதாகவும் தெரியவந்தது.
இதனையடுத்து குறித்த இளைஞர்களை ஜேர்மனி பொலிசார் விடுவித்துள்ளனர். ஆனால் போருக்கு பயன்படுத்தும் ஆயுதங்களை உரிய அனுமதியின்றி எடுத்துச்சென்றதற்காக உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என சுவிஸ் தரப்பில் தற்போது கோரியுள்ளனர்.
துப்பாக்கி கைவசம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் மட்டுமின்றி அவருடன் பயணம் மேற்கொண்ட எஞ்சிய இளைஞர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு 24 வயது சுவிஸ் ராணுவ வீரர் ஒருவர் தமது துப்பாக்கியுடன் ஜேர்மன் நகரில் பொலிசாரிடம் சிக்கினார்.
அவருக்கு ஜேர்மன் நீதிமன்றமானது 8,100 பிராங்குகள் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
(Image: pressmailing.net)