சுவிஸில் மூடப்பட்ட பழமைவாய்ந்த சுரங்கபாதை: மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

காற்றோட்ட அமைப்பில் பிரச்சனை இருந்ததாக கடந்த செப்டம்பர் மாதம் மூடப்பட்ட சுவிஸின் பழமைவாய்ந்த சுரங்கபாதை மக்கள் பயன்பாட்டுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கிரேட் செண்ட் பெர்னார்டு என்ற பெயருடைய சுரங்கபாதையானது ஞாயிறு காலை எட்டு மணிக்கு திறக்கப்பட்டது.
நாட்டின் மார்டிஜ்னி நகரையும் வடமேற்கு இத்தாலியின் ஆஸ்டா மண்டலத்தையும் சுரங்கபாதை இணைக்கிறது. இதன் வழியாக ஆண்டுக்கு சராசரியாக 7,40,000 வாகனங்கள் சென்று வருகிறது. தற்காலிகமாக காற்றோட்ட பிரச்சனை சரி செய்யப்பட்டுள்ள நிலையில் வாகனங்கள் 60 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம் டிரக் லொறி போன்ற கனரக வாகனங்கள் சுரங்கபாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரேட் செண்ட் பெர்னார்டு சுரங்கபாதையின் கட்டுமான பணிகள் கடந்த 1958-ல் தொடங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்காக 1964-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம் திகதி திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.