Tamil Swiss News

ஜெனீவாவிலும் டீசல் கார்களை தற்காலிகமாக தடை செய்வது குறித்து திட்டம்

ஜெனீவாவிலும் டீசல் கார்களை தற்காலிகமாக தடை செய்வது குறித்து திட்டம்

கடந்த வாரம் ஜேர்மனியின் உயர்நீதிமன்றங்களில் ஒன்று நகரங்களின் முக்கிய பகுதிகளில் அதிக மாசு ஏற்படுத்தும் வாகனங்களைத் தடை செய்யலாம் என்று தீர்ப்பளித்தது.

இதனை தொடர்ந்து ஜெனீவாவிலும் டீசல் கார்களை தற்காலிகமாக தடை செய்வது குறித்து திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிரான்சின் அமல்படுத்தப்பட்ட Crit'Air என்ற திட்டத்தை அடிப்படையாக கொண்டு இந்த திட்டமானது தயார் செய்யப்பட்டுள்ளது.

அதாவது கார்கள் பதிவு செய்யப்பட்ட திகதி, கார்களின் ஆற்றல் திறன் மற்றும் அவை வெளியேற்றும் மாசுபாட்டின் அளவை பொறுத்து அவைகள் ஆறு வகைகளாக பிரிக்கப்படும், அதன்படி அதிக மாசு ஏற்படுத்தும் கார்களை கண்டறிந்து தடை செய்யப்படும்.

பிரான்சின் Crit'Air என்ற திட்டத்தை பொறுத்தவரை பழைய டீசல் கார்கள் தான் தடை விதிப்பு பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இவற்றை தடை செய்வதன் மூலம் நைட்ரஜன் டை ஆக்சைடு வெளியேற்றம் மற்றும் ஓசோன் படலத்தை பாதிக்கும் மாசு துகள்களை ஓரளவு கட்டுக்குள் வைக்கலாம்.

இரண்டு நாட்கள் முதல் இரண்டு வாரங்கள் வரை என ஆண்டுக்கு மூன்று முறை இந்த தடை விதிப்பு ஜெனீவாவில் அமல்படுத்தப்பட உள்ளது.

இதனால் பிரான்சிலிருந்து ஒவ்வொரு நாளும் ஜெனீவாவிற்குள் கார்கள் மூலம் பிரவேசிப்பவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று Mouvement Citoyen Genevois (MCG) எனும் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு நாளும் பிரான்சிலிருந்து ஜெனீவாவிற்கு கார் மூலம் சுமார் 500,000 மக்கள் பயணம் செய்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.