Tamil Swiss News

சுவிஸ் வங்கிக்கு ரூ.170 கோடி பரிமாற்றம் செய்த மல்லையா- சிபிஐ தகவல்

சுவிஸ் வங்கிக்கு ரூ.170 கோடி பரிமாற்றம் செய்த மல்லையா- சிபிஐ தகவல்

 விஜய் மல்லையா தனது லண்டன் வங்கி கணக்கில் இருந்து சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிக்கு ரூ.170 கோடி பண பரிமாற்றம் செய்து இருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது. #vijayMallya #CBI

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு திருப்பிக் கொடுக்கவில்லை.

வங்கிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இதுபற்றி வழக்கு தொடர்ந்ததும் விஜய் மல்லையா கடந்த 2015-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்.

மல்லையா செய்த மோசடி பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. மல்லையா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரை சி.பி.ஐ. திட்டமிட்டு தப்ப விட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.

மல்லையாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக்அவுட் நோட்டீசை திருத்தி சி.பி.ஐ. மெத்தனமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இதை சி.பி.ஐ. அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

 இந்த நிலையில் விஜய் மல்லையா தனது லண்டன் வங்கி கணக்கில் இருந்து சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிக்கு ரூ.170 கோடி பண பரிமாற்றம் செய்து இருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது. இங்கிலாந்து நாட்டு பொருளாதார பிரிவு அதிகாரிகள் மூலம் இந்த தகவல் சி.பி.ஐ.க்கு வந்துள்ளது.

அதன்பேரில் மல்லையா மீதான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள மல்லையாவின் சொத்துக்களை முடக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதோடு மல்லையாவை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வரும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.